"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Saturday, December 30, 2006

ஆங்கிலப் புத்தாண்டு விருந்து!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வாங்க நேரா விருந்து நிகழ்ச்சிக்குப் போவோம்.



முதலில் எல்லோரும் இதைப் பார்ப்போம்.

பார்த்து விட்டு சீக்கிரமாக வாங்க ..விருந்து காத்திட்டிருக்கு.



பார்த்தீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீங்களா !!!

:)

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.


விருந்தின் உங்களுக்குப் பிடித்தவற்றை கிளிக் செய்யவும்.

( ஒரு சமயத்தில் இரண்டைச் சாப்பிட விரும்புவர்கள் அந்த இரண்டு இணைப்பையும் தனித்தனியே க்ளிக்குங்கள் - வேற யாருக்கு உற்சாகப் பான பிரியர்களுக்குத் தான் இந்த செய்தி)


அப்புறம் சைவம் மட்டும் தான். அசைவம் சமைக்கலாம்னு யோசிச்சு வருச ஆரம்பம் விழா அதுவுமா! எதுக்கு உயிர்களைக் கொல்லனும்னு தான் விட்டுட்டோம்.


முதலில் கொஞ்சம் இனிப்பு சாப்பிடலாங்க!

கொஞ்சம் காரம் சாப்பிடுங்க! (சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்)

உற்சாகப் பான பிரியர்களுக்கானப் பிரிவு

உங்களுக்கு பச்சையாக அப்பிடியே சாப்பிடனும்னா இங்க வாங்க.

முழுச்சாப்பாடு சாப்பிடலாங்களா!

நல்லா சாப்பிடீங்களாண்ணா!

கொஞ்சம் ஐஸ்கிரீம் சாப்பிடறீங்களாண்ணா!

:)

நிறையப் பேர் புத்தாண்டு செய்தி சொல்லிவிட்டபடியால் , என் பங்குக்கு இந்த விருந்து.

:)

மீண்டும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!

( புத்தாண்டு பிறக்க இன்னும் எவ்வளவு நேரமிருக்கு என்று தெரிந்து கொள்ள கிளிக்குங்கள் இங்கே!)

Wednesday, December 20, 2006

ஏதாவது செய்யனும் சார்....!


இப்பதிவின் நோக்கம் சென்ற ஞாயிறு அன்று நடந்த பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு அலசல் மட்டுமல்ல. அன்று நான் சொன்ன,சொல்ல விழைந்த கருத்துகளைப் பற்றியும் தான்.

முதலாவதாக, அன்று வந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள்! இச்சிறியேன் பேசிய சிறு செய்திகளையும் செவிமெடுத்துக் கேட்டமைக்கு!!

இந்த சந்திப்பின் நோக்கம் திரு அவர்களின் வருகையும், அவர் பதிவர்களை சந்திக்க இருப்பதும் என அறிவித்தார் லக்கிலுக்.

என் ஆவல் மிகுதியானது.

தனி அலுவல்கள் பல இருந்தாலும் அத்தனையும் புறந்தள்ளி, மார்கழி மாதத்துவக்கம் தந்த மென் பனியில், மெத்தென்ற புல் படுக்கை தந்த சுகத்தில் மெதுவாய் வந்திருந்த அனைவரையும் உற்று நோக்கினேன். ஒரு 25 பேர் இருக்கலாம் என்று கணக்கு போட்டது. ஆனால், 25 போர் வாள்கள் என்று மனசு சொன்னது.

அருள்,ஜெய்சங்கர்,வீரமணி மற்றும் புகைப்படமிட்ட பதிவைக் கொண்ட சில பதிவர் தவிர அனைவரும் எனக்கு புது முகங்களே!

இதுக்கு தானே ஆசைப்பட்டாயடா! என்று மனசு குதியாட்டம் போட்டது.

வெவ்வேறு களங்கள், நாடுகள், ஊர்கள் என விரிந்த உலகினில் பதிவராய் வாழ்ந்ததால் தானே இன்று இங்கு அமர முடிந்தது என மகிழ்ந்தேன்.

நேரம் கடக்க மெதுவாய் பாலபாரதி தன்னை அறிமுகம் செய்து கொண்டு அனைவரையும் சுயஅறிமுகம் செய்யப் பணித்தார். அதுவும் லக்கிலுக் அனைவரையும் அழைத்ததால் அவர் துவங்கட்டும் என்றார். அதில் மற்றும் ஒரு விடயமும் இருந்தது. அதாவது அவரின் இடப்புறம் இருந்த 'ஆலமரம்'எழுதும் 'திரு' அவர்கள் இருந்தது தான். ஆகையால், 'திரு' அவர்கள் முடிவாய் சுய அறிமுகம் செய்து கொண்டு, சந்திப்பின் முதன்மை விடயம் பேசத் துவங்க ஏதுவாய் இருந்தது.

'நீயா அது! '..ஓ! ?' ' நீங்களா அது...!?' ' :) ' என்றெல்லாம் ஆங்காங்கே சிறு கூக்குரல்கள் எழும்ப, ஒவ்வொருவராய் அமர்ந்தபடியே அவர்தம் பற்றிச் சொன்னது நன்றாக இருந்தது.

'திரு' அவர்கள் பேசத் துவங்க, அனைவரும் அமைதியாய் அவர் முகம் நோக்கினார்கள். எளிய நம்மவர் போன்ற பேச்சு, மிகத்தூய்மையான தமிழ் வார்த்தைகள், முயற்சித்துப் பார்க்கச் சொன்ன தமிழ் நடை என அனைத்து அம்சங்களுடன் சொல்லத் துவங்கிய கையெழுத்து இயக்கமும் அதன் குறிக்கோளும் நெஞ்சைத் தைத்துவிட்டது.

பின்னர் தனித்து விடப்பட்ட சிறுசிறு குழுக்களாய்ப் போன பதிவர் கூட்டத்தில் சில நிமிடங்கள் 'திரு' வின் அருகில் இருக்க நேரிட்டது.

அப்போது 'திரு' அவர்களிடம் ''ஓகை' அவர்கள் "உங்கள் தொழில் என்ன?" என்று வினவினார்.

அமைப்புச்சாரா தொழிலாளார்களுக்கான ஒரு அமைப்பில் அங்கம் வகிப்பதாகச் 'திரு' பதில்சொன்னார்.
"அது பணியல்ல! சேவை!! " என்று ஓகை சொன்னார்.
அதனை அடக்கத்துடன் மறுத்தார் 'திரு'.

அருகிலிருந்த நான் வியந்து போனேன். இப்படியும் சிலர் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள். இல்லையெனில் மனிதம் என்றோ மரித்துப் போயிருக்கும்.

ஈழம் பற்றிய மற்றும் ஒரு புதிய பார்வை ஒன்றும் அவர் கூறிவிடவில்லை. ஆனால், நாம் (அநேகமாக) எல்லோரும் வெறும் பேச்சுகளாய், கட்டுரைகளாய், கவிதைகளாய் மட்டுமே ஈழத்தமிழர் தம் அவலங்கள் பற்றிப் பேசிக் கொண்(டே)டிருக்கிறோம். ஆனால், 'திரு' அதற்கான ஒரு முயற்சியை மேற்க்கொண்டுள்ளார்.

கையெழுத்து இயக்கம் என்ன செய்துவிடபோகிறது என்ற வழக்கமான கேள்வி நண்பர்களால் கேட்கப்பட்டது. 'திரு' அவர்கள் பொறுமையாக விளக்கினார்.

எனது பங்களிப்பாக சொன்னவை நான் அறிந்த ஈழத்தமிழர்தம் இந்திய வாழ்வு. கதியற்றவர் அதாவது அகதி என்ற சொல்லடியிலேயே எனக்கு உடன்பாடு இல்லை.

சில தலைமுறைகளுக்கு முன் சென்ற அமர்த்தியா சென் இந்தியர்.
கல்பனா சாவ்லா அரியானா மாநிலத்தில் பிறந்து பின்பு அமெரிக்காவில் குடியேறியவர். தற்போதய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண்.

இப்படியெல்லாம் பெருமை பேசி களிக்கும் நாம், நம் முன்னோர்களின் வம்சாவளியினர் இன்று தந்தை நாடு நோக்கி வலியுடன் வரும் போது என்ன செய்கிறோம் ??

ஒரு கவிஞர் கவிதை பாடுகிறார் !

ஒரு படைப்பாளி கதையில் போர்வாள் தூக்குகிறார் !

சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பிரமாதமாய் ஒடுகிறது !

அவற்றில் அருமையாய் நடித்தவர்க்கு விருதுகள் வழங்கப்படுகிறது !

குறும்திரைபடம் எடுத்து மாணவர்கள் பட்டயம் பெறுகிறார்கள் !

இரங்கட்பா இசைக்கப்படுகிறது !

அரசியலைப் பற்றி சொல்லவே வேண்டாம் !

வழக்கம் போல் நம் பதிவர்கள் ( நானும் தான்) பதிவிட்டு பின்னூட்ட அஞ்சலி செய்கிறோம்.

இதுவா அவர்களுக்கு தேவை ?!?

முதலுதவி தான் இல்லை புரையோடிய புண்ணுக்கும் கூடவா நம்மால் மருந்திட முடியவில்லை.

"ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் புரிந்துகொள்ளாத நாம்தான் விருந்தோம்பல் நாகரிகத்தின் தலைவர்கள் என்று இலக்கியங்களில் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். " என்று நமது பதிவர் " மயிலாடுதுறை சிவா." என்பவர் அவர்கள் அவர்தம் பதிவில் கூறியுள்ளார்.

அது உண்மையா?! மாற்ற நாம் எங்கனம் விழைவது ??

இதெற்கென்ன ஆதாரம் ?? எங்கே செய்தி?? என்பவர்க்காக நான் சில செய்திகளைத் திரட்ட முயன்று வருகிறேன்.

சிலவற்றை இப்போது பதிகின்றேன்.

அவற்றில் முதலாவதாக கீற்று என்ற இணையத்தளத்தில் வந்த http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html பாருங்கள். நான் கூற வருவது உங்களுக்குப் புரியும்.

அன்றைய பதிவர் கூட்டத்தில் நான் வைத்த வேண்டுகோள் இது தான்.


உலகில் உள்ள தமிழர்கள் 1997 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 74,000,000 பேர்கள்.

இந்தியாவில் மட்டும் : 63,000,000

இலங்கையில் : 3,600,000

மலேசியாவில் : 1,500,000

சிங்கப்பூரில் : 250,000

மற்றவர் உலகமெங்கும்..

தமிழ் தாய்நாடாம் தமிழகத்தை (நம்மை) நாடி வரும் தமிழர்களை, நாம் நடத்தும் பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர் அனைவரும் விடுதலை இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல என்பதனை 'அரசும்' ஏற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் தம் வாழ்வாதாரம் பற்றி கவலை கொண்டு ஆவண செய்ய வைக்க வேண்டும். குறைந்த பட்சம் அகதிகள் முகாம் என்ற மோசமான சிறைச்சாலைகள் தரத்தையாவது முன்னேற்ற வேண்டும். அவர்களுக்கு மீன் கூட வேண்டாம். மீன் பிடிக்க வலைகளையாவது தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


தீர்வுக்காக எனது யோசனைகள்:

1. ஓட்டு வங்கிக்காக போராடும் அரசியல்வாதிகள் நடுவே, சிலர் நம் தமிழர்கள் என்று போராட இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமே இதனை நினைவுபடுத்தலாம். அவர்களை பாராட்டிப் பதிவிடும் பதிவர்கள் இதனையும் சிரமேற்க்கொண்டு செய்தால் இன்னும் மகிழ்ச்சி.

2. யார் பூனைக்கு மணி கட்டுவது எனக் காத்திராமல், சட்டென்று உங்கள் யோசனையை பகிறுங்கள்.

3. கீற்று.காம் போன்ற இணையங்கள் செய்திகள் தான் வெளியிடமுடியும். பதிவர்கள் மற்றும் இதைப் படிப்பவர்களாகிய நாம் அதனை அனைவரிடமும் எடுத்துச் செல்ல (சொல்ல) முடியும்.

4. வெளிநாட்டில் வாழும் அன்பர்கள் இது போன்ற விடயங்களை சிரமேற்க் கொள்ளும் N.G.O. ஏதேனுமிருந்தால் தெரிவியுங்கள்.

5. பண உதவி, பொருள் உதவி எல்லாம் அரசாங்கம் செய்யலாம். மற்றபடி தேவைப்பட்டால் நம்மால் இயன்றவற்றைச் செய்வோம்.

6. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த வலைப்பதிவாளர்கள் இதனை அனைவருக்கும் சொல்லுங்களேன். நீங்கள் எறியும் சிறு கல், குளத்தில் வட்டமாக பரப்பும்.

7. கண்டனக்குரல் கேட்க வேண்டியவர் செவிக்கெட்டி விடும் என்றாலும் அதற்கான முனைப்பை விட்டிடாது வேண்டியவை நடக்கும் வரை தொடர வேண்டும்.

எனது வருத்தங்கள்:

1. குழுக்கள் அமைத்து உண்மை அறியலாம் என்றொரு யோசனை பகிறப்பட்டது. சான்றுகள் தான் தேவையா! இல்லையெனில் மருந்திட மாட்டீரா! இத்தனை பேர் கூறியும், உங்களுக்கு இன்னும் நம்பிக்கை
இல்லையா!! அது போன்ற குழுக்களின் தீர்வு வரும் முன், எத்தனையோ இதயங்கள் கருகிப் போகலாம். ஆயினும், அது போன்ற ஆய்வரிக்கை வந்து தான் உதவிகள் செய்வோம் என்ற முடிவெடுக்க நாம் என்ன உச்சநீதிமன்றமா !!!

2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பார்கள். நன்றாக கவனித்தால் நிரந்தரமாக இருந்துவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்! நிச்சயமாக மாட்டார்கள் ?! எந்த ஒரு மனிதனும் தன் கல்லறையை பிறந்த மண்ணில் தான் கட்ட விரும்புவான். அவர்கள் வாழ விரும்புவதும் அவர்கள் மண்ணில் தான். அப்படித்தான் இருந்து விட்டுப் போகட்டுமே உங்கள் ஓட்டெண்ணிக்கை அதிகமாகுமே.

தன் குடும்பம் , தன் வாழ்க்கை முக்கியம் தான்.

இது போன்ற மனிதாபிமான செயல்கள் உங்களைப் புடம் போடும் நண்பர்களே!

நீங்களே உங்களை நம்பாவிட்டால் பின் யார் நம்புவார்கள்??


ஆற்றாமையால் தான் சொல்கிறேன் ! பேசியது போதுமென நினைக்கிறேன்!?

ஏதாவது செய்யனும் சார்....!




தேவையில்லை என்று நினைத்தாலும் சொல்ல விரும்பிய பின்குறிப்பு:

கடைசியாக, இது போன்ற ஈழத்தமிழர் பற்றி பேசுவது, எழுதுவது, செயல்கள் எல்லாம் திராவிடம் சார்ந்தது என சில பதிவர்கள் அன்று வரமுயற்சிக்க வில்லை என்று கேள்விப்பட்டு வியந்தேன். வருந்தினேன்.
தமிழனை திராவிடன் என்று ஒதுக்குபவர்கள், அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து இனிமேல் வேறு மொழியில் எழுதிக்கொள்ளுங்கள்!? எங்கள் தமிழில் வேண்டாமே உங்கள் பதிவுகள் !

இதுதான் சாக்கு! என்று திராவிடம் இது எனக் கூறி, திராவிட-ஆரியச்சண்டைகளையும் இங்கு அரங்கேற்ற வேண்டாம் நண்பர்களே ??!!

ஆரியம், திராவிடம், விவிலியம்,இஸ்லாமியம்......இவை அனைத்தும் கடந்தது மனிதம்.

நல்லவை நடக்கவே விரும்புகிறோம். வீண் விவாதங்கள் வேண்டாமே!!


இப்பதிவிற்குத் தொடர்புடைய இடுகைகள்:

http://www.keetru.com/vizhippunarvu/sep06/students.html

http://manikoondu.blogspot.com/2006/06/blog-post_14.html

பதிவர் வட்ட சந்திப்பு பற்றி தொடர்புள்ள இடுகைகள்:

1. பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை : தமிழ்நதி
2. சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு -சுடச்சுட : அன்புடன் ச.சங்கர்
3. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு -12-17-06 : சிவஞானம்ஜி
4. சென்னை சந்திப்பு-1 : பொன்ஸ்
5. சென்னை சந்திப்பு-3 : பொன்ஸ்

Monday, December 18, 2006

சிவப்பதிகாரம்


நேற்று சென்னை-வலைப்பதிவு கூட்டத்தில் பங்கேற்று சூடாய் பேசியும், கேட்டும், புது நண்பர்களிடம் கைகுழுக்கி... மொத்தத்தில் சந்தோசமாய் களைத்துப் போனேன்.

மனசு முழுவதும் பதிவர் கூட்டத்தின் உரையாடல்களே ஓட்டிக்கொண்டிருந்தது. தூங்கமுடியாது போலிருக்கிறதே! என்றெண்ணி ஒரு நண்பரும் நானும் திரைப்படம் செல்வதென்று முடிவு செய்து சிவப்பதிகாரம் சென்றோம்.

கவிதையாய் கிராமியப் பின்னணியில் துவங்கியது.

வரிசையாய் கிராமியப்பாடல்கள் காதில் வந்து விழ, வெறும் குத்துப் பாடல்களும் வடக்கித்திய பாடகர்/பாடகிகளின் மெல்லிய கஜல் பாடும் குரல்களின்றி கணீர் என்று கேட்டகுரல்கள் மிகவும் மகிழ வைத்த்தது.

'பருவாயில்லை' என்றெல்லாம் வரிகள் இல்லாமல் நல்ல தமிழில், உச்சமாய் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல்களை கேட்கும் போது, நிறைய இழந்துவிட்டோம்..இன்னும் இழக்க எத்தனையோ! என்று மனசு விம்மியது.

அதுவும் நாங்கள் வழக்கமாக பார்க்கும் அவ்வரங்கில் பாட்டுப் போட்டால் போதும், புகைப்பார்கள் கிளம்பி நடக்கத்தொடங்கிடுவார்கள்.
ஆனால், ஒருவர் கூட இப்பாடல் ஒளி/ஒலித்த போது நகராது கண்டு , ஒவ்வொருத்தன் உள்ளேயும் ஒரு கிராமத்தான் இருக்கத்தான் செய்கிறான் என்ற வாக்கியம் உண்மை என உணர்ந்தேன்.

பிறகு துவங்கிய இரண்டாம் பாதியில் தான் கதையே!

எல்லோரும் போல் ஒரு அறிவுரையோடு முடிக்காமல், படம் பார்ப்பவரைப் பார்த்து " ஏதாவது செய்யனும் சார்! " என்றபோது ஊனமுற்றவன் போல் உணர்ந்தேன்.

சமுதாயமும் குடும்ப வட்டம் என்ற கைச்சங்கிலியும் எத்தனை நாட்கள் தான் உணர்வுகளைக் கட்டிப் போடுமோ தெரியவில்லை.

வழக்கமான பேராசிரியர்கள் இல்லை.( வெ.ஆ.மூர்த்தி போன்றவர்கள்)

வழக்கமான மாணவர்கள் இல்லை.( சின்னி செயந்த், விவேக்)

காமெடியாக மாணவர்கள் காட்டப்படவில்லை.

"ட்டாய்ய்ய்ய்ய்ய்" என்றெல்லாம் வசனங்கள் இல்லை.

"இவன் பாக்கறதுக்கு தான் கருப்பு சூடானால் சிவப்பு" போன்ற பஞ்ச் டயலாக்குகள் இல்லை.

பழைய மியூசியத்தில் உள்ள அரதப்பழசான கதைகளை தூசு தட்டி ரீமிக்ஸ் பாடல்கள், வசனங்கள் இல்லை.

நமீதாக்களையும் குத்தாட்டங்களையும் இரட்டை மூவர்ண தமாசுகளை எதிர்பார்பவர்களுக்கு இப்படமில்லை.

இப்படி எத்தனையோ இல்லைகள்....

ரகுவரன் மிக அருமையாக நடித்திருக்கிறார். அவர் மாதிரி 'மாதிரிகள்' இல்லாதுதான் நம் குறையா?? என்று மனசு கேட்ட போது அப்துல்கலாம் முதல் எம்.எஸ். உதயமூர்த்தி வரை வந்து போனார்கள். பிறகென்ன செய்யவேண்டும் என்று மனசு பலவாறு சண்டையிடத் துவங்கியது.

படத்தில் வசனம் மிகக்குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.

" Try to be Black or White Dont be in Gray"
" எத்தனை நாள் கெட்டதைப் பார்த்து பேசாமல் இருந்தீங்க! அது மாதிரி தான் நான் நல்லதை செய்ற இந்தக் கொலைகளைப் பத்தி பேசலை!"



எப்போதாவது சில படங்கள் பார்த்தால் மனம் சில்லிட்டு பேச முடியாமல் போகும். அப்படி ஒன்று தான் சிவப்பதிகாரம்.


அமைதியான அறையில் தீடீரென மீட்டப் பட்ட வீணையின் தந்திகளை போல் நீண்ட நேரம் மனசில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் போன்ற ஒர் உண்ர்வு தோன்றியது மட்டும் உண்மை.



கடைசி செய்தி:

நேற்று ஒரு பிரபலத்தொலைக்காட்சியில் இப்படத்தைப் பற்றி வந்த விமர்ச்சனம்: " ஒரு கல்லூரி மாணவர்கள் அரசியல்வாதிகளை தொந்தரவு செய்தால் என்ன பாடுபடுவார்கள் என்பதை சொன்ன ஒரு படம் என்றது."


இது எப்படி இருக்கு!!



பதிவர் வட்ட சந்திப்பு பற்றி தொடர்புள்ள இடுகைகள்:
1. பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை : தமிழ்நதி
2. சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு -சுடச்சுட : அன்புடன் ச.சங்கர்
3. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு -12-17-06 : சிவஞானம்ஜி
4. சென்னை சந்திப்பு-1 : பொன்ஸ்

Wednesday, December 13, 2006

தடாலடியாக ஒரு வேண்டுகோள்!




தடாலடியாக ஒரு அறிவிப்பு மற்றும் வேண்டுகோள்.



நான் வலைப்பூ உலகிற்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில் நிறைய மாற்றங்கள் கண்டேன்.

1.அரசியல் /இன/மத கலப்பின்றி எழுதுவது முடியுமா?
2.இலக்கியம் என்று கூறி வெட்டி வாதங்கள் மட்டும் போதுமா?
3. கார்டூன் / ஜோக் என்று வெட்டி ஒட்டுவேதே சிறந்ததா?
4. சமுதாயச் சிந்தனை என்று உலகளவில் அறிவுரை வழங்குவதா?
5.பின்னூட்டப் போர் மட்டுமே போதும் என நேரம் கழிப்பதா?
6. இதெல்லாம் விட குழுமஉறுப்பினராகி சண்டைகளில் பங்கேற்பதா!

மேற்கூறியவை, இன்றைய வலைப்பூ வேதங்களாகி விட்ட நிலையில், கெளதம்ஜி போன்ற ஒரு சிலரின் வலைப்பூக்கள் என்னைக் கவர்ந்தது.

மேற்கூறிய வகைகளில் இவரும், ஏன் நானும் கூட எழுதியிருக்கலாம். ஆனால், யார் மனதையும் புண்படுத்தாத ஒரு சில பதிவாளர்களில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்பட்டேன்.

தேன்கூட்டில் அதிகம் பார்வையிடப்பட்டவை என்றொரு போட்டி. தமிழ்மணத்தில் அதிகம் பின்னூட்டம் பெற்றவை என்றொரு போட்டி.

தேன்கூட்டில் உள்ள குழப்பமான தேர்வுமுறையில் இன்னும் உள்ள மாதந்திரப்போட்டி. தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவு என்று அழைக்கப்பட்டு, இதுவரை அது எப்படி முறைப்படுத்தப்படுகிறது என்று புரிந்து கொள்ள இயலாத ஒரு முறை.

இப்படியெல்லாம் நான் பார்த்து குழம்பிய காலக்கட்டத்தில், தடாலடிப் போட்டி என்று பார்த்து, மிகவும் ஆவலுடன் கலந்து கொண்டேன்.


ஆனால், அந்தப் போட்டி இன்று நிறுத்தி வைக்கவும் நானும் ஒரு காரணமாகிவிட்டேன்.

ஆம் நண்பர்களே! கெளதமிற்கு தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தவன் நானே!

!?!!?!!!

ஆனால், அந்த வேண்டுகோள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது போல் தெரிகிறது. நான் விடுத்த வேண்டுகோள் இது தான்.

உண்மையான பெயரில் எழுதுவது என்பது பாலகுமாரன் காலத்திலேயே இல்லை. ஆனாலும், இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் வெறும் புகழுக்காக மட்டும் பதிவதில்லை. நம் எழுத்தையும் சிலர் படிக்கிறார்கள் என்ற ஒரு சிறு மகிழ்ச்சி மட்டுமே தவிர வேறில்லை.

இதில் தடாலடிப்போட்டியின் பங்கு சிறிதோ,பெரிதோ ஆனால், குறிப்பிடத்தக்கது.

எனவே சிலரின் படைப்புகளுக்கு மட்டுமே தொடர் பரிசு என்பது சில சந்தேகங்கள் வர இடமளிக்கிறது. அதை சில பதிவர்கள் நேரிடையாகவே என்னிடம் சொன்னபோது, நான் வருத்தமடைந்து உடனடியாக கெளதம்ஜியிடம் பகிர்ந்தேன்.
மற்றவர்க்கும் வாய்ப்பளியுங்களேன்!? என்ற போது, அவர் அவரின் நியாய வாதங்களையும், தேர்ந்தெடுக்கும் முறையையும் சொன்னார். (இதை அவர் பதிவிலும் சொல்லியுள்ளார்)

மேலும், ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதலாவதாக வரலாம் ! எப்படி 2,3, ஆறுதல் என வரச் சாத்தியம் என்றேன்.

ஆனால்,நல்ல விடைகளை ஒருவரே அனுப்பும் போது எப்படி நான் ஒதுக்குவது என்றும் சொன்னார்.

அதுவும் உண்மைதான்.

இருந்தாலும், புதியவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஏதேனும் வாய்ப்பு பாருங்களேன் என்ற ஏக்கத்தை அவரிடம் பதிந்தேன்.
அவருக்குள்ள நிர்வாகச்சிக்கல்களைச் சொன்னார். இந்த போட்டி போன்று வேறு ஏதேனும் துவங்க அனுமதி வாங்குவது கடினம் என்றார்.

ஆகவே, கெளதம்ஜி தம் சேவை நிறுத்தப்பட வேண்டியது அல்ல.

பத்திரிக்கை, வானொலி,தொலைக்காட்சி என்ற ஒரு வட்டத்தை விட்டு, வலைப்பதிவு என்ற புதிய தமிழ் வளர்க்கும் ,ஒரு புதிய தலைமுறை வளர, தமிழ் அழியாதிருக்க பாடுபட்ட ஒரு குழுமப் பத்திரிக்கை கூட முன் வராவிட்டால் எப்படி?

வருமா? வரவேண்டுகிறோம் !

ஏனெனில், என்று பதிவுகள் கெளதம் சார்ந்த அந்த வெகுசனப் பத்திரிக்கையில் வெளிவரத்துவங்கியதோ, அப்போதே இப்பதிவுகளின் பார்வையாளர்கள் சில லட்சம் ஆனது உண்மை. அதுதானே எழுதுபவர்தம் விருப்பம்.

இதை நான் பின்னூட்டமாக ஏன் வெளியிடவில்லை என்ற போது, அது நம் வலைப்பூ பின்னூட்ட அரசியலின் அடுத்த அத்தியாயம் ஆகிவிடுமெனச் சொன்னேன்.


புகைப்படத்திற்கு கமெண்ட்டுகள் எனத்துவங்கி, இன்னும் மற்ற படைப்புகளையும் தர உதவ வேண்டுகிறோம்.
ஆகவே, கெளதம்ஜி வெளிவராது போய் விடும், சில நல்ல கருத்துகளும், சிந்தனைகளும் புதைந்து போகாது இருக்க உதவுங்கள்.
எங்களிடையே, விமர்ச்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மையை வளருங்கள்.

ஒரு பத்திரிகையாளாரால் மட்டுமே விமர்ச்சனங்களை சரியாக உணரவைக்க முடியும்.

எனவே, என் போன்றோரின் எண்ணத்தில் குறையில்லை. வார்த்தைகளில் இருந்திருக்கலாம். நான் என் கருத்தை உங்களுக்குப் புரியவைப்பதில் இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலாம்.


என் சக வலைப்பதிவாளர்களே! ஒரு நல்ல துவக்கத்தினை வேரோடு அழிய விடாதிருக்க முயல்வோம்.

கடைசியாக, ரோஜாவுடன் முள் இருந்தாலும், முள்களோடு ரோஜா இருந்தாலும் ரோஜாச் செடி என்று தான் கூறுகிறோம். முள்செடி என்றல்ல.

பின்குறிப்பு: இதற்கு நேர்முனையான பின்னூட்டமிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்களேன் அவருக்கு. ஏதேனும் விட்டுப்போய்ருந்தால் நினைவு படுத்துங்கள். நன்றி.
குறிப்பாக லக்கிலுக்காரின் மன வேதனையடைய, கெளதமின் அறிவிப்புக் காரணாமாயிருந்தது கண்டு வேதனையடைந்தேன். அவர்மீது எந்தக் காழ்ப்புணர்வும் எனக்கு இல்லை. அவர்தம் நல்படைப்புகள் தொடரவும் நல் நட்பு வளரவும் விரும்புகிறேன்.

Thursday, December 07, 2006

நல்முத்துப் பேரன்கள்!


கபடியில் தங்கம் வென்றது இந்தியா- இனிப்பு செய்தி.

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கபடி விளையாட்டில் கிடைத்துள்ளது.

அதுவும் பரம எதிரியான(!?) பாகிஸ்தானை வென்றது குறிப்பிடத்தக்கது.

காலைவாரிவிடுவதில் வல்லவர்கள் என உலகம் போற்றும் இந்தியாவில், காலைவாரிவிடுவதில் வெற்றிபெற்றதிற்கு வாழ்த்துவோம்.

இது உள்குத்து இல்லைங்க! உண்மையில் நமது சாதனை ஆசிய அளவில் என்ற்றும் இருக்கிறது. இது உலக அளவில் மாறவேண்டுமென்பது அனைவரின் விருப்பம் மற்றும் வேண்டுதலும் கூட.



தங்கம் வென்ற சகோதர்களே! வாழ்த்துகள்!

கடைசி செய்தி:

ஆசியப் போட்டியில் 5வது முறையாக தொடர்ந்து இந்திய கபடி அணி தங்கக் கோப்பையை வென்றது.கடந்த 1990ம் ஆண்டு பீஜீங்கில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் முதன்முறையாக கபடி சேர்க்கப்பட்டது முதல் இந்தியா தொடர்ந்து தங்கப் பதக்கத்தை வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

(நன்றி-புகைப்பட உதவி :தினமலர்)

கபடியைப் பற்றிய ஒரு சிறு நினைவுகூறல்:



இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்).


இவ்வாட்டம் விளையாட மட்டையோ பந்தோ ஏதும் தேவை இல்லை. வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு" அல்லது மூச்சுவிடாமல் 'நாந்தான் உங்கப்பன்டா ...' என்றெல்லாம் பாடலாம்) என்று பாடிக்கொண்டு எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும் பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.

ஆடுகளம்:

ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை தரை மண் அல்லது மரத்தூள், மணல் பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல.

ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும் (இன்னும் எழுத வேண்டியுள்ளது)

Wednesday, December 06, 2006

சிறு சேதி !




இன்றைய காலக்கட்டத்தில் நகைக்கக் கூட நேரமின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு நண்பர் குழுமம் அனுப்பி மகிழும் சிறு சேதிகள் (SMS) , படிக்கும் கணங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என்றால் அது மிகையில்லை.


மேலும், நம்பிக்கை தரும் சிறு சேதிகளும் அவ்வாறே! ஒவ்வொரு சேதியை உருவாக்கவும் யாரோ ஒருவர் நேர விரயம் செய்கிறார் என்றாலும், அது சிலர் மனதை பூக்க செய்கிறது.
அது போல் நான் பெற்ற சேதிகளின் ஒரு சிறு 'தொகுப்பூ' உங்களுக்காக!


நல் கருத்துகள் :


1. நம்மை விரும்பியவர்களை ஏமாற்றாதே! ஏமாற்றியவர்களை விரும்பாதே!



2. ஒரு நல்ல நண்பன் உன் முதல் கண்ணீர் துளியைப் பார்ப்பவன்! இரண்டாம் கண்ணீர்துளியை கையில் ஏந்தி, மூன்றாம் துளியை நிறுத்தி, நாலாம் துளியை சிரிப்புடன் வர வைப்பவன்.


3. நம் எல்லோருக்கும் சரிசமமான திறமைகள் இருப்பதில்லை. ஆனால், எல்லோருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள சரிசமமான வாய்ப்புகள் அளிக்கிப்படுகிறது.


4. முயற்சிகள் தோல்வியடையலாம். முயற்சி செய்ய தோற்று விடாதே!


5. மேடு பள்ளமில்லாத பாதைகள் நல்ல ஓட்டுநரை உருவாக்குவதில்லை! அலையில்லாத கடல் நல்ல மாலுமியை உருவாக்குவதில்லை! மேகங்கள் இல்லாத வானம் நல்ல வானூர்தி வல்லுநரை உருவாக்குவதில்லை! தோல்விகள் இல்லாத வாழ்க்கை நல்ல மனிதரை உருவாக்குவதில்லை!


6. வெற்றிக்கனவுகள் என்பது தூங்கும் போது வருவதில்லை. அவை நம்மை தூங்கவிடாது செய்வது.


7. ஆறு போகும் பாதையில் போக நீந்தாதிரு! நீ போகும் பாதைக்குச் செல்ல நீ நீந்தியாக வேண்டும் !


8. ஒரு பழத்தில் உள்ள விதைகளை நீ எண்ணிவிடலாம்! ஆனால், அவ்விதைகளில் எத்தனை விருட்சங்கள் உள்ளன என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். விதைகளை எண்ணுவதை விட்டுவிட்டு, விதைகளை விதைக்கப் பழகு!


9. நீ வெற்றி பெற்றால் யாரிடமும் விளக்கத் தேவையில்லை! ஆனால், தோல்வியுற்றால் யாரும் விளங்கக் காத்திருப்பதுமில்லை!


இளைஞர்களுக்கான(ஹி ஹி) தத்துவங்கள் :


1. பெண் தோழி என்பவள் பல்விளக்கும் பிரஷ் போன்றவள். பல்விளக்கும் பிரஷை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிகாதே! 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடு.



2. எப்பொழுதும் நீ பேசாது, எந்தப் பெண்ணையும் நிறைய பேச அனுமதிக்காதே! பிற்காலத்தில் , நீ தன்னந்தனியே பேச நேரிடும்.


3. நர்ஸ் நம்ம கையப் புடிச்சா அது 'செக்கப்' , நாம நர்ஸ் கையைப் புடிச்சா அது 'பிக்கப்' !


4. திருவள்ளுவர் 1330 குரள் சொன்னாலும், அவர் 1 குரலில் தான் பேச முடியும்.


5. நீ சிக்கலில் மாட்டித் தவிக்கும் போது அறிவு சொல்றதைக் கேட்காதே! அது சரி இருந்தாதானே கேட்பாய்!?


6. " ஏம்பா! உனக்கு புலி நகம் வேணும்னா ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வா! ஏன்னா! அன்னைக்குத் தான் எப்பவும் நகம் வெட்டுவேன் !


7. நான் கடவுளிடம் கேட்டேன்! உங்கள் காதலுக்கும் எனது காதலுக்கும் வித்தியாசமென்னவென்று, அவர் சொன்னார் " எனது காதல் வானத்திலுள்ள பறவை போல, உனது தட்டிலுள்ள பறவை போன்றது! அவ்வளவே".


நகைச்சுவை:



1. உலகின் மிக குறுகிய ராஜினாமாக் கடிதம்: " மதிப்புக்குரிய ஐயா! உங்கள் மனைவியை நான் காதலிக்கிறேன்."

2. உனக்கு நினைவிருக்கிறதா! சின்ன வயதில்,ஒரு நாள் நாம் பொம்மைக் கடைக்குச் சென்றோம். நீ கடைக்காரரிடம், "அந்தக் குரங்கு பொம்மை வேண்டும் ? " என்றாய். அவர் சொன்னார் " அது கண்ணாடி என்று! "


3. உன்னை நினைத்தாலே எனக்கு தூக்கமே போய் விடுகிறது! சிறு வயது முதலே எனக்கு பேய்! பிசாசு! என்றால் ரொம்ப பயம் தெரியுமா ?!


4. " ஏய் ! உன்னோட ஒரு வாரம் வந்து தங்கட்டுமா? சொல்லுப்பா!" இப்படிக்கு 'மெட்ராஸ் ஐ."


5.
ஆசிரியர் : " நமது கண்ணபிரான் பிறக்காமிலிருக்க, கம்சன் என்ற அவரது மாமன் கண்ணபிரானின் தாய்,தந்தையரை சிறையில் அடைத்து, அவருக்கு முன் பிறந்த 7 குழந்தைகளையும் கொன்றான்"


மாணவன்1 : " ஏன் சார்?"


ஆசிரியர் : " அதாவது கம்சன் ஜாதகப்படி , 8 வது குழந்தை தான் கம்சனை கொல்லுமென்பது விதி! எனவேதான் அப்படி செய்தான்!"


மாணவன்2: " அது சரி சார்! அதுக்கு கண்ணன்பிரான் அப்பா! அம்மாவை ! ஒரே சிறையில் அடைக்காமிலிருந்தாலே போதுமே ?! "




சர்தார்ஜி ஜோக்குகள் :

1.

சர்தார்ஜி1 : " இந்த பீரில் நிறமில்லை! "


சர்தார்ஜி2 : " இந்த பீரில் திடமில்லை!"


சர்தார்ஜி3 : " இந்த பீரில் சுவையில்லை!"


பார் அட்டெண்டர்! : " அடப் பாவிகளா! அது சோடாடா !"


2.


டாக்டர் : " வயிறு சம்பந்தமான இந்த நோய் வராமிலிருக்க தினமும் இரண்டு சொம்பு தண்ணீர் குடிங்க!"


சர்தார்ஜி : " அய்யோ! டாக்டர்! எங்க வீட்டில் ஒரு சொம்பு தானே இருக்கு ! "


3.


குட்டி சர்தார்ஜி : " கடவுளே ! எப்படியாவது மும்பையை இந்தியாவின் தலைநகராமாக்கி விடு!"


கடவுள் தோன்றிக் கேட்டார். "ஏன்பா? "


குட்டி சர்தார்ஜி : " ஏன்னா! நேத்து பரீட்சையில் அப்படித்தான் எழுதினேன்!"


4. டாக்டர் : "கொசு கடிக்காமிலிருக்க இந்த மருந்தை தடவுங்க!"

சர்தார்ஜி : " அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சு தடவறது!?"

5.


கடைக்காரர் : " சார் ! இந்தக் கண்ணாடியில் என்ன விசேசம் என்றால், 10வது மாடியில் இருந்தும் கீழே போட்டுங்க! தரையிலிருந்து 1 அங்குலத்திற்கு மேல்வரை உடையாம இருக்கும்!"


சர்தார்ஜி : " எனக்கு 2 பார்சல்"


6.


குட்டி சர்தார்ஜி : " அப்பா! இன்னிக்கு ராத்திரியிலிருந்து நம்ம பணக்காரர் ஆயிடலாம்.

சர்தார்ஜி : " எப்படிடா!? "

குட்டி சர்தார்ஜி : " இன்னைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை எப்படி ரூபாயா மாத்தறதென்று சொல்லித்தரப் போறாங்க!"


*********

Friday, December 01, 2006

8ஸ் !

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் இந்நாளில்...

கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டும் இனிவருவன...